Wednesday, June 15, 2011

சமச்சீர் கல்வி தேவையா தேவை இல்லையா

சமச்சீர் கல்வி தேவையா தேவை இல்லையா என்பதற்கு அரசு நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டும் இருக்கும் வேளையில் தமிழகத்தில் நடுத்தர வர்க்கமும் நகர்ப்புற பெற்றோரும் சமச்சீர் கல்வி தேவை இல்லையென்ற கருத்துக்களை கொண்டுள்ளனர். பள்ளிகளின் வாயிலில் பெற்றோர்கள் பேசும் பேச்சுக்களும் விவாதிக்கும் போக்கும் சமச்சீர் கல்விக்கு எதிரானதாகவே உள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் சமச்சீர் கல்வி தரம் குறைந்தது, அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகள் எழுத தரம் மிக்க கடுமையான பாடத்திட்டம் தேவை என அவர்கள் கருதுகின்றனர். சமச்சீர் என்ற பெயரில் கிராமப்புற ஊராட்சி பள்ளிகளில் பயிலும் ஏழை விவசாய மாணவர்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் அமைந்துள்ளதாக கருதுகின்றனர், இதை வைத்துக்கொண்டு போட்டி போடமுடியாது, அறிவு வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். உண்மையில் நகர்ப்புறங்களில் ஓர் வாக்கெடுப்பு நடத்தினால் சமச்சீர் கல்விக்கு எதிராகவே இவர்கள் வாக்களிப்பார்கள்.தரம் குறைந்த கல்வியை செலவு செய்து கற்ப்பிக்க வேண்டுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த காரணத்திற்காகவே CBSE பள்ளிகளுக்கு தமது குழந்தைகளை படிக்க வைக்க படாதபாடு படுகின்றனர். நிறைய மெட்ரிக் பள்ளிகள் CBSE பாடமுறைக்கு மாற விண்ணப்பிக்க தொடங்கிவிட்டன. பெற்றோரின் அங்கலாய்ப்பை காசாக மாற்றிக்கொள்ள மெட்ரிக் பள்ளிகள் தயாரகி விட்டன. தற்போது தமிழகத்தில் உள்ள 9582 பள்ளிகளில் 3474 மெட்ரிக் பள்ளிகளும் 154 CBSE பள்ளிகளும் உள்ளன. இவற்றை நடத்தும் கல்வி வியாபாரிகள் இத்திட்டத்திற்கு எதிராகவே உள்ளனர் அவர்கள் சமச்சீர் கல்வி தரமற்றது என்ற செய்தியை இக்கல்வி நடைமுறைக்கு வரும் முன்னர் இருந்தே பரப்புரை செய்து வருகின்றனர்.ஏனென்றால் ரூ.20,000/- கல்விக்கட்டணமாக வசூலிக்கும் இவர்களின் பாடத்திட்டமும் ரூ.500/- வாங்கும் அரசுப் பள்ளியின் பாடத்திட்டமும் ஒன்று என்றால், நடுத்தர மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கியே செல்வார்கள் இதனால் தமது கல்விக் கடைகளை மூட நேரிடும் என்பது இவர்களின் அச்சம்.
சமச்சீர் கல்வியில் சரியோ தவறோ ஆனால் சமமற்ற கல்வி நிலையில் இருந்து சமமான ஓர் நிலைக்கு செல்ல மக்கள் எதிர்ப்பதற்கு காரணம் சாதி ஏற்றத்தாழ்வுகளை கடைப்பிடித்து, தம்மை ஆதிக்கம் செய்பவனைப்பற்றி கவலைப்படாமல் சாதி நிலையில் தமக்கு கீழாக இருப்பவனை சமமாக கருதாத ஆதிக்க சாதி தன்மையும் ஒரு காரணம். ஏனென்றால் கல்வியின் தரத்தைப் பற்றி பேசும் பெற்றோர்கள் 10ஆம் வகுப்பு வரை மெட்ரிக்கும் CBSE யும் படிக்க வைத்துவிட்டு மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதற்காகவே +1,+2 வகுப்புகளில் மாநிலக் கல்விப் பாடத்திட்டத்திற்கு தாவுகிறார்கள் இவர்கள் கூற்றின்படி தரமாகவே இருந்தும் மெட்ரிக்கும் CBSE யும் படிக்க வைக்கததற்கு காரணம் மதிப்பெண்களே மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தில் கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம். தரமற்றதாக இருந்தாலும் ஏழை கிராமப்புற மாணவன் படிக்கும் மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் இங்கு மட்டும் தரம், நல்ல பாடத்திட்டம் போன்றவைகள் அடிபட்டுவிடுகிறது. அப்படியே சமச்சீர் கல்வித்திட்டத்தில் குறைகள் இருந்தாலும் அவற்றை வருகிற ஆண்டுகளில் அரசிடம் போராடி சரி செய்து கொள்ளலாம் என்ற மனநிலை கிஞ்சித்தும் இவர்களிடம் இல்லை. அனைவருக்கும் சமமான ஒன்று என்று இருக்கக்கூடாது எல்லாவற்றிலும் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கவேண்டும் என்ற மனநிலை மேலோங்கும் மக்களிடம் இதைத்தவிர எதை எதிர் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment