Friday, June 24, 2011

வளர்ச்சியா? ஆதிக்கமா?

2011 ஆம் ஆண்டிற்கான மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மதிப்பெண் தர வரிசைப் பட்டியல் இவ்வாரம் வெளியிடப்பட்டது. தினமலர் (23.6.11) பின்னேறியவர்களில் முன்னேறியவர்கள் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியலைப் பார்க்கும் போது இது உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது. அனைத்து வகுப்பினரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கான இடங்கள் அதாவது 31 சதவீத இடங்களை பெரும்பாலும் பிற்பட்ட வகுப்பினரே(B.C) ஆக்கிரமித்துக்கொண்டனரோ என எண்ணத் தோன்றுகிறது. அதாவது முதல் 100 இடங்களில் 9பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பினரும், ஒரே ஒரு இடத்தை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரும் உள்ளனர். மற்ற 90 இடங்களில் பி.ப வகுப்பினரே(BC,MBC,BCM) உள்ளனர். இது திறந்த போட்டியில் ஆகும் இதற்கு பின் 50% இடங்கள் பி.ப வகுப்பினருக்கே வழங்கப்பட உள்ளது. இதே நிலைதான் பொறியியல் கல்லூரியிலும் முதல் 19 இடங்களில் 15 இடங்களில் பி.ப வகுப்பினரும் 3 இடங்களில் மு.ப வகுப்பினரும் ஒரே ஓர் இடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் வந்துள்ளனர். இதைப் பார்க்கும் போது உயர் கல்வியில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனர்களை பின்னுக்கு தள்ளியதைப் போல இருந்தாலும், இன்னும் மேலே வர வேண்டிய SC பிரிவினரும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கென உள்ள ஒதுக்கீட்டைத்தவிர ஒரு சில இடங்களையே பொதுப் போட்டியில் அவர்களால் பெற முடிந்துள்ளது. 1800 மருத்துவ இடங்களில் கிட்டத்தட்ட 1400 இடங்களையும் 1,20,000 பொறியியல் இடங்களில் 80,000 இடங்க்ளையும் பி.ப வகுப்பினரே ஆக்கிரமிப்பு செய்துவிடுவார்கள். இது ஓர் கல்வி ஆக்கிரமிப்போ என எண்ணத்தோன்றுகிறது. ஏற்கெனவே ஆதிக்க சாதியினரல் தீண்டாமைக் கொடுமைக்கு நவீன வடிவத்திலும் வழமையான வடிவங்களில்லும் சாதி கொடுமையை அனுபவிக்கும் SC பிரிவினர் உயர் கல்வியில் பி.ப வகுப்பினரின் இவ்வளர்ச்சிப் போக்கால் மேலும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடிய நிலை வரலாம். கடுமையான எண்ணிக்கையில் பின் தங்க நேரிடலாம் ஆகவே அரசும் படித்து நல்ல பணியில் உள்ளவர்கள் SC மாணவர்களை உயர் கல்விக்கு மேலும் தகுதி படைத்தவர்களாக உருவாக்க உரிய பயிற்சியை அளிக்க ஆவன செய்ய வேண்டும்.ஏனெனில் உயர் வகுப்பினர் தங்களுக்கு உள்ள வசதி வாய்ப்புகளைக்கொண்டு அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எழுதி இதைவிடச் சிறந்த கல்வி நிலையங்களுக்கு சென்று விடுகின்றனர். அல்லது பணம் கொடுத்து விரும்பிய கல்வி நிலையத்தில் சேர்ந்து விடுகின்றனர். உயர் கல்வியை இப்போதுதான் நுகரும் SC மாணவர்களுக்கு இவ்வாய்ப்புகள் இல்லை. குறைந்த பட்சம் தமிழக உயர் கல்வி எண்ணிக்கையில் சம எண்ணிக்கையில் வர வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எதிர் காலத்தில் பி.ப வகுப்பினருக்கு சமமாக வர வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment